Monday, 2 October 2017

சென்னை டூ கோவில்பட்டி (1)

திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் அறைதோழரிடம் சாப்பிட மறந்ததை தெரிவிக்கையில்

" அருண்ன பார்க்க போற சந்தோசத்துல்ல சாப்புட மறந்துடீங்களா "

"இந்த மாதிரி பீடையெல்லாம் ஒழிஞ்சிரும்னு நினச்சா,பார்க்க போறப்ப கரெக்டா ஆரம்பிக்குது.இரத்த காவு வாங்காம திரும்பி வந்துரனும்டா  சாமி"

பயணமானது ஆயுத பூஜையின் முன்தினம் காலை ஓன்பது மணி அளவில் தொடங்கியது.கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நுழைத்ததும் ஆவினில் ஒரு பாதாம் பால் வாங்கி சாப்பிட்டுவிட்டு,மதுரை செல்லும்  பேருந்துகள் நிற்கும் வரிசையை நோக்கி நடந்தேன். முன்பதிவு செய்த புண்ணியவான்கள் பேருந்தில் ஏறி இறங்கியபடி இருக்க,அகால நேரத்தில் பயணம் செய்ய முடிவெடுத்தவர்கள் நடத்துனரையே வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தோம்.ஒரு திறமைசாலி டீயும் வடையும் வாங்கிகொடுத்து இருக்கையை உறுதி செய்துகொண்டார்.கடைசி வரைக்கும் நமக்கு இந்த நேக்குபோக்கு நமக்கு வரபோரதுல்ல.மணி 9.50 வரை நிற்கவைத்து "சீட் இல்லப்பா" என வானத்தை பார்த்து சொன்னார். அட சண்டாளப்பாவி என மனதில் கருவிக்கொண்டே எதிர் வரிசையில் நின்ற திருச்சி பேருந்தில் ஐக்கியமானேன்.

பேருந்து பூ மார்க்கெட்,பழ மார்க்கெட்,காய்கறி மார்க்கெட் என ஒரு மணி நேரம் கோயம்பேடயே  சுற்றிகொண்டிருந்தது. வாழை கன்றும்,வெள்ளை பூசணியும் குவித்து வைத்திருந்தார்கள்.பன்னெண்டு மணி வாக்கில் பேருந்து மாநகர எல்லையை தாண்ட வயிற்றுக்குள் சிறு குமுறல்.சற்றே தூங்கி சமாதானபடுத்த எத்தனிக்கையில் டோல்கேட்டில் பேருந்து நின்றது.சுண்டலும்,அவித்த வேர்கடலையும் விற்றுக்கொண்டிருந்தார்கள்.பொது இடங்களில் உணவருந்துவது எனக்கு அவ்வளவு வசதியாக இருக்காத காரணத்தாலும், பசியில் இருந்த காரணத்தாலும் குழம்பிகொண்டிருக்கையில் சகபயணி சுண்டல் வாங்கிவிட்டார் பேருந்தும் டோல்கேட்டை தாண்டிவிட்டது.அடுத்த டோல்கேட்டில் வாங்கிக்கொள்ளலாம் என மனதை தேற்றிகொண்டே தூங்கிபோய்விட்டேன்.

கண்விழித்து பார்க்கையில் இம்முறை வேர்கடலையுடன் காட்சி தந்து புன்னகையும் புரிந்தார் சகபயணி.இனிமேல் எப்படி தூக்கத்தை தொடர்வது,மணி வேறு  ஒன்றாகியிருந்தது.பக்கவாட்டில் அமர்ந்திருத்த தம்பதியினர் பேருந்தினிள்ளே கைகழுவி கட்டுசாதத்தை பிரித்தனர்.அவர்களுக்கு முன்னிருக்கையில் அமர்திருந்த அம்மாள் ஆரஞ்சு பழத்தோலை  உரித்து கீழே போட்டுக்கொண்டிருந்தாள்.சகபயணி அவர் பங்கிற்கு கடலை தோலை ஊதிகொண்டிருந்தார்.பின்னிருக்கை இசை பையித்தியம் ஒன்று உச்சஸ்தாயியில் "அரச்ச சந்தனம் அழகு குங்குமம்"தை அலறவிட்டுக்கொண்டிருந்தது.பேருந்து உணவகத்தில் நின்றபொழுது பசி பாதி போய்விட்டது. சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது (கோயம்பேடில் பார்த்த ) அதே திறமைசாலி வந்து 'சாப்பாடு டேஸ்டா இருக்கானு' கேட்டார்.இதுதான் பழிவாங்க சரியான இடம்னு பார்த்து 'நல்லாலிருக்குனு' சொல்லி வைத்தேன்.பண்ணிய  பாவத்துக்கு தண்டனையா 90 ரூபாய் பில்லுக்கு நூறு ருபாய் வாங்கி 'தேங்க்ஸ்'சொல்லிட்டு போய்ட்டார் சிப்பந்தி.மறுபடியும் ஒரு குட்டி தூக்கத்தை போட்டு திருச்சி வந்து சேர்ந்தேன்.

திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பேருந்தில் மிதமான கூட்டம் தான்.பக்கத்தில் அமர்ந்திருந்த தம்பி கேட்டுச்சி 'படிக்குரீங்கலானு' (முடி மட்டும் கொட்டாம இருந்துதுனா இன்னும் பத்து வருஷம் ஸ்டுடென்ட்னு சொல்லி ஓட்டிடலாம் போலயேன்னு) 'ஆமானு' தலையை ஆட்டிவைத்தேன்.ஒத்தக்கடையில் பத்து அடி தூரத்துக்குள் ஒலிபெருக்கிகள் வைத்து அலறவிட்டு அதை விட சத்தமாக பேசிகொண்டிருந்தனர் மண்ணின் மைந்தர்கள்.மாட்டுத்தாவணியில் இறங்கியதும் கிட்டவந்து ஒருவர் "சென்னை சென்னை" என்றார்.

 "இல்லனா"

"ஏசி,நான் ஏசி,ஸ்லீபேர்,செமி ஸ்லீபேர் "

"சென்னைலேர்ந்து தான்னா வரேன்"





No comments:

Post a Comment

தராசு

 அவன் யாசிக்கும் பொழுது இல்லை என சுலபமாக மறுக்கலாம் நியாய தராசில் நமக்கான காரணங்களை அடுக்கி  முள்ளை நம் பக்கம் வளைக்கலாம் குப்பைத்தொட்டியி...