Friday, 12 February 2021

தராசு

 அவன் யாசிக்கும் பொழுது

இல்லை என சுலபமாக மறுக்கலாம்

நியாய தராசில்

நமக்கான காரணங்களை அடுக்கி 

முள்ளை நம் பக்கம் வளைக்கலாம்

குப்பைத்தொட்டியின் அருகில்

 அவன் செல்லும்பொழுதே  

அத்தராசுகள்

குலைந்து நடுங்கிவிடும்

ஓரு விண்டு அள்ளி 

வாயில் வைத்ததும்

அவனை ஓடிச்சென்று 

கட்டிக்கொள்ளும் தராசுகள் 

அனைத்திலும் முட்கள் இல்லை

Saturday, 11 April 2020

மௌனக்குமிழி

நம்மிருவருக்கும் இடையே
தர்ஜனி முத்திரையில்
சம்மணம்மிட்டு அமர்ந்திருக்கும்
மௌனக்குமிழியை உடைக்கும்
பாடலை கேட்கத் துவங்கினேன்

உன்மேல் கொண்ட
வன்மங்களை அள்ளி
தூரிகையால் விசிறி
உன் இறைஞ்சும் கைகளை
குமிழியின் மேல் வரைந்து
முகம் புதைத்துக் கொண்டேன்

குரல்வளை மெல்ல இறுக
அப்பாடலின் இசை
இனிதே துவங்கியது  

Tuesday, 21 January 2020

ICE AGE

நாவல் பழமிட்ட
உன் வெண்பனி கொங்கைகளால்
இவ்வுலகம் பனிக்கோலம் பூண்டது
இவ்வுலகை கடுங்குளிரிலிருந்து காக்க
உன்னை வெம்மை அடைய
உன் அங்கம் சுற்றிய ஆடையிடம்
மண்டியிட்டு வாங்கிய சொற்கள் யாவும்
உன் கன்னக்குழியை
இட்டு நிரப்பவே போதவில்லை
தீப்பிழம்பாய் எனை படைத்து
உன்னிடம் அனுப்பினான் இறைவன்
யட்சி உனை அள்ளி அணைத்ததும்
பனி விலகியோடியது
உன் பின்கழுத்தில் பதித்த முத்தத்தால்
மீண்டும் செங்கதிர் வந்தது
உன் அல்குல்  தீயால்
நாம்  பெருஞ்சுடராக
உயிர்கள் இப்புவியில் மீண்டும் தழைத்தது

  

Thursday, 12 December 2019

Offended

உன் சுகந்தத்தை
சட்டென நிறுத்தி
கள்ளக்கோப குழந்தையின்
கண்களை கொண்டு
நீ புண்பட்டதாக சொல்லும்
இந்த விளையாட்டை
தினம் நடத்துகிறாய்
ரதியின் ஒக்கலில் அமர 

Tuesday, 2 July 2019

Sell Me This Pen

உள்கனன்றெழும் சினத்தை
நான்கு தங்க  வட்டிலில் வைத்து
விற்பனைக்கு காத்திருந்தேன்
முதலில் வந்த உஷை
ஓர் விண்டு அள்ளி வாயிலிட்டு
ஐயோ காமம் என அலறினாள்
வருணனனோ தங்க வட்டிலில்
வைத்து விற்கும் போதே தெரிகிறது
உன் தாழ்வுணர்ச்சி என்கிறான்
மீதம் இரண்டையும்
துக்கம் தாளாமல்
நானே உண்டுவிட்டேன்

Thursday, 21 March 2019

பிறன்மனை

எதிர்ரெதிரே அமர்ந்திருக்கும்
நம்மிருவரிடையே தேங்கிநிற்கும்
காற்றை உறிஞ்சி வெற்றிடமாக்கி
கூச்சலிட்டு ஆனந்த களியாடும்
நம் உடல்களை வள்ளுவன்
எழுத்தாணியால் வழுக்கு தடம்
போட்டு நாற்காலியை எட்டி உதைத்து/தான்

1)சொன்னான் "அறம் என்னும் கிரீஸ்
     டப்பாவை எப்படி உதைத்தாய் என்று?"

2)அங்கே நடனமாடும் கால்களின்
    இசையே தற்பொழுது நாமிருவருக்குள்ளும்
    இட்டு நிரம்பியிருக்கிறது 

Monday, 30 July 2018

பெருந்திணை

முகத்திற்கேற்ற விழிகளாக
உன் காதலன் நோக்காக்கால்
நிலைகொள்ளாது ததும்பி
எனை நோக்கும்
அவ்விழிகளை வரைவேன்
பின்பு அவ்வோவியத்தை
சுக்குநூறாக கிழித்தெறிவேன் 

Monday, 5 February 2018

கேவல்

தழுவிச்  செல்லும் 
காற்றின் புரடியை பற்றி இழுத்து
அதன் மென்னியை
மெல்லத் திருகுங்கள்
செவிப்பறையில் செல்லும்
அதிர்வலைகளில் மட்டும்
கிளர்ச்சி
கோபம்
ஸ்கலிதம் மற்றும் இன்ன பிறவற்றை
நீங்கள் மரணிக்கும் வரை
கேட்டுக்கொண்டிருக்கலாம்
ஒருக்காலும் பிடியை
தளர்க்கசொல்லாது.

Wednesday, 17 January 2018

பிரபஞ்ச தரிசனம்

கடந்து சென்ற
அந்த ஓரிரு நொடிகளை
ஒன்று புள்ளி நான்கு நான்காம்(1.44) முறையாக
நினைவு கூர்கையில்
எடை தாளாமல்
மஞ்சள் நிறக்கலவையாய்
வெடித்துச் சிதறினேன்
அதில் ஓர் சிட்டிகை எடுத்து
கண்ணக் கதுப்புகளில் பூசி
கோயிலுக்கு செல்கிறாள்
அடேய் மண்டையா
உன் பிரபஞ்ச தரிசன
பிதற்றல்களை கக்கத்தினுள்
ஒளித்து வைத்துக்கொள்

காதல் கலவி மரணம்


இன்னும் சில மணிநேரத்தில்
தினங்களில் அல்லது வாரங்களில்
எண்ணிலடங்கா மீளுருவம்
பெறா கூறுகளாய் மாறும்
அக்கணத்தை பலவாறு
மீட்டுருவாக்கம் செய்தேன்
அக்கணம் இம்மீட்டுருவாக்கங்கள்
அல்லாத வழியில் தானென்று
எனக்கு சர்வநிச்சயமாகத் தெரியும்.

Monday, 2 October 2017

சென்னை டூ கோவில்பட்டி (1)

திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் அறைதோழரிடம் சாப்பிட மறந்ததை தெரிவிக்கையில்

" அருண்ன பார்க்க போற சந்தோசத்துல்ல சாப்புட மறந்துடீங்களா "

"இந்த மாதிரி பீடையெல்லாம் ஒழிஞ்சிரும்னு நினச்சா,பார்க்க போறப்ப கரெக்டா ஆரம்பிக்குது.இரத்த காவு வாங்காம திரும்பி வந்துரனும்டா  சாமி"

பயணமானது ஆயுத பூஜையின் முன்தினம் காலை ஓன்பது மணி அளவில் தொடங்கியது.கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நுழைத்ததும் ஆவினில் ஒரு பாதாம் பால் வாங்கி சாப்பிட்டுவிட்டு,மதுரை செல்லும்  பேருந்துகள் நிற்கும் வரிசையை நோக்கி நடந்தேன். முன்பதிவு செய்த புண்ணியவான்கள் பேருந்தில் ஏறி இறங்கியபடி இருக்க,அகால நேரத்தில் பயணம் செய்ய முடிவெடுத்தவர்கள் நடத்துனரையே வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தோம்.ஒரு திறமைசாலி டீயும் வடையும் வாங்கிகொடுத்து இருக்கையை உறுதி செய்துகொண்டார்.கடைசி வரைக்கும் நமக்கு இந்த நேக்குபோக்கு நமக்கு வரபோரதுல்ல.மணி 9.50 வரை நிற்கவைத்து "சீட் இல்லப்பா" என வானத்தை பார்த்து சொன்னார். அட சண்டாளப்பாவி என மனதில் கருவிக்கொண்டே எதிர் வரிசையில் நின்ற திருச்சி பேருந்தில் ஐக்கியமானேன்.

பேருந்து பூ மார்க்கெட்,பழ மார்க்கெட்,காய்கறி மார்க்கெட் என ஒரு மணி நேரம் கோயம்பேடயே  சுற்றிகொண்டிருந்தது. வாழை கன்றும்,வெள்ளை பூசணியும் குவித்து வைத்திருந்தார்கள்.பன்னெண்டு மணி வாக்கில் பேருந்து மாநகர எல்லையை தாண்ட வயிற்றுக்குள் சிறு குமுறல்.சற்றே தூங்கி சமாதானபடுத்த எத்தனிக்கையில் டோல்கேட்டில் பேருந்து நின்றது.சுண்டலும்,அவித்த வேர்கடலையும் விற்றுக்கொண்டிருந்தார்கள்.பொது இடங்களில் உணவருந்துவது எனக்கு அவ்வளவு வசதியாக இருக்காத காரணத்தாலும், பசியில் இருந்த காரணத்தாலும் குழம்பிகொண்டிருக்கையில் சகபயணி சுண்டல் வாங்கிவிட்டார் பேருந்தும் டோல்கேட்டை தாண்டிவிட்டது.அடுத்த டோல்கேட்டில் வாங்கிக்கொள்ளலாம் என மனதை தேற்றிகொண்டே தூங்கிபோய்விட்டேன்.

கண்விழித்து பார்க்கையில் இம்முறை வேர்கடலையுடன் காட்சி தந்து புன்னகையும் புரிந்தார் சகபயணி.இனிமேல் எப்படி தூக்கத்தை தொடர்வது,மணி வேறு  ஒன்றாகியிருந்தது.பக்கவாட்டில் அமர்ந்திருத்த தம்பதியினர் பேருந்தினிள்ளே கைகழுவி கட்டுசாதத்தை பிரித்தனர்.அவர்களுக்கு முன்னிருக்கையில் அமர்திருந்த அம்மாள் ஆரஞ்சு பழத்தோலை  உரித்து கீழே போட்டுக்கொண்டிருந்தாள்.சகபயணி அவர் பங்கிற்கு கடலை தோலை ஊதிகொண்டிருந்தார்.பின்னிருக்கை இசை பையித்தியம் ஒன்று உச்சஸ்தாயியில் "அரச்ச சந்தனம் அழகு குங்குமம்"தை அலறவிட்டுக்கொண்டிருந்தது.பேருந்து உணவகத்தில் நின்றபொழுது பசி பாதி போய்விட்டது. சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது (கோயம்பேடில் பார்த்த ) அதே திறமைசாலி வந்து 'சாப்பாடு டேஸ்டா இருக்கானு' கேட்டார்.இதுதான் பழிவாங்க சரியான இடம்னு பார்த்து 'நல்லாலிருக்குனு' சொல்லி வைத்தேன்.பண்ணிய  பாவத்துக்கு தண்டனையா 90 ரூபாய் பில்லுக்கு நூறு ருபாய் வாங்கி 'தேங்க்ஸ்'சொல்லிட்டு போய்ட்டார் சிப்பந்தி.மறுபடியும் ஒரு குட்டி தூக்கத்தை போட்டு திருச்சி வந்து சேர்ந்தேன்.

திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பேருந்தில் மிதமான கூட்டம் தான்.பக்கத்தில் அமர்ந்திருந்த தம்பி கேட்டுச்சி 'படிக்குரீங்கலானு' (முடி மட்டும் கொட்டாம இருந்துதுனா இன்னும் பத்து வருஷம் ஸ்டுடென்ட்னு சொல்லி ஓட்டிடலாம் போலயேன்னு) 'ஆமானு' தலையை ஆட்டிவைத்தேன்.ஒத்தக்கடையில் பத்து அடி தூரத்துக்குள் ஒலிபெருக்கிகள் வைத்து அலறவிட்டு அதை விட சத்தமாக பேசிகொண்டிருந்தனர் மண்ணின் மைந்தர்கள்.மாட்டுத்தாவணியில் இறங்கியதும் கிட்டவந்து ஒருவர் "சென்னை சென்னை" என்றார்.

 "இல்லனா"

"ஏசி,நான் ஏசி,ஸ்லீபேர்,செமி ஸ்லீபேர் "

"சென்னைலேர்ந்து தான்னா வரேன்"





தராசு

 அவன் யாசிக்கும் பொழுது இல்லை என சுலபமாக மறுக்கலாம் நியாய தராசில் நமக்கான காரணங்களை அடுக்கி  முள்ளை நம் பக்கம் வளைக்கலாம் குப்பைத்தொட்டியி...